ஹெபடைடிஸ் சி தீநுண்மியின் பரவல் மூலத்தைக் கண்டறிந்த பிரித்தானிய விஞ்ஞானிக்கு நோபல் பரிசு!

ஹெபடைடிஸ் சி தீநுண்மியின் பரவல் மூலத்தைக் கண்டறிந்த பிரித்தானிய விஞ்ஞானிக்கு நோபல் பரிசு!

கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் சி தீநுண்மியின் பரவல் மூலத்தைக் கண்டறிந்ததற்காக பிரித்தானிய விஞ்ஞானி மைக்கேல் ஹெளட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளான அமெரிக்க விஞ்ஞானிகளான ஹார்வி ஜே.ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், இந்தாண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் நேற்று (திங்கட்கிழமை) முதல் அறிவிக்கப்படுகிறது.

இதன்படி, நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நோபல் குழு வெளியிட்ட அறிக்கையில்,

‘ஹெபடைடிஸ் ஏ, பி தீநுண்மி வகைகளைச் சாராத புதிய வகை ‘ஹெபடைடிஸ் சி தீநுண்மியின் பரவல் மூலமானது ரத்தத்தில் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகளான ஹார்வி ஜே.ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானியான மைக்கேல் ஹெளட்டன் கண்டறிந்தனர்.

அவர்களின் கண்டுபிடிப்பு, ‘ஹெபடைடிஸ் சி தீநுண்மிக்கான அதிநவீன இரத்தப் பரிசோதனை முறைகளை உருவாக்கவும், நோய்த்தொற்றுக்கு எதிரான மருந்துகளை உருவாக்கவும் பெரிதும் உதவியது. ‘ஹெபடைடிஸ் சி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கானோரைக் காப்பாற்றுவதற்கும் மூன்று விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பே அடிப்படையாக அமைந்தது.

அவர்களின் கண்டுபிடிப்பால் ‘ஹெபடைடிஸ் சி நோய்த்தொற்றை குணப்படுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது. அந்நோய்த்தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசாக தங்கப் பதக்கத்துடன் 1,118,000 டொலர்கள் பரிசுத்தொகையும் அளிக்கப்படும். அந்தப் பரிசுத்தொகையானது மூன்று விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

உலகம் முழுவதும் ‘ஹெபடைடிஸ் நோய்த்தொற்றால் ஆண்டுதோறும் 7 கோடி பேர் பாதிக்கப்படுவதாகவும், அவர்களில் 4 இலட்சம் பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கல்லீரல் தொற்று, புற்றுநோய் ஆகியவற்றுக்கு முக்கிய காரணமாக ‘ஹெபடைடிஸ் நோய்த்தொற்று உள்ளது.

அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதய நோய், சக்கரை நோய் போன்று நீண்ட நாள்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

பிரித்தானிய விஞ்ஞானியான மைக்கேல் ஹெளட்டன், ‘ஹெபடைடிஸ் சி தீநுண்மியை குளோனிங் முறையில் பெருக வைப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியபோது கனடாவிலுள்ள அல்பேர்டா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

தீநுண்மியியல், நோய்த்தொற்றுத் தடுப்பியல் உள்ளிட்டவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இவர் ‘லாஸ்கர’ விருதை வென்றுள்ளார்.