பல்வேறு இடங்களில் முன்பாதுகாப்பு நடவடிக்கைகள்...!

பல்வேறு இடங்களில் முன்பாதுகாப்பு நடவடிக்கைகள்...!

நாட்டில் கொவிட்19 பரவல் குறித்த அச்சுறுத்தல் மேலோங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்களத்தில் பணியாற்றும் கம்பஹாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் கடமைபுரிந்த நூதனசாலையில் இன்று கிருமித் தொற்றுநீக்கம் செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாநகரசபை பொதுச்சுகாதார பிரிவு இதற்கான நடவடிக்கைகயை எடுத்திருந்தது.

யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்களத்தில் பணியாற்றும் பெண் ஒருவரின் தாய், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிவரும் நிலையில், அவர் கொரோனாத் தொற்றுக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் நூதனசாலையில் பணியாற்றும் பெண்ணுடன், யாழ்ப்பாணம் கோட்டையில் பணியாற்றும் அவரது நண்பரும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த நிலையில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு ஊட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்களத்தின் ஏனைய பணியாளர்கள் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார பிரிவினரால் வேண்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேய யாழ்ப்பாண நூதனசாலையில் கிருமித் தொற்றுநீக்கி விசுறும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, வெளிப்பிரதேசங்களில் இருந்து ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திற்கு வருகின்ற அனைத்து பயணிகளும் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்ற வேண்டும் என காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ, மஸ்கெலியா, நாவலபிட்டி, கண்டி, கொழும்பு, யாழ்பாணம், மட்டகளப்பு உட்பட ஏனைய பகுதிகளுக்கு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பேண வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

பேருந்துகளில் ஆசனத்திற்கு ஏற்றவாறு பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என சாரதிகளுக்கும், நடத்துனர்களுக்கும் காவல்துறையினர் தெளிவூட்டியுள்ளனர்.