அதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்....!

அதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்....!

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய சுமார் ஐயாயிரம் பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பிரதான மருத்துவ அதிகாரி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நாடு பூராகவும் இதுவரை 3 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் மேலும் 29 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுடன் நெருங்கிய தொடர்பிணை பேணிய 18 பேருக்கு நேற்று தொற்றுறுதியானது.

அத்துடன் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 1053 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திலிருந்து நாடு திரும்பிய 7 பேருக்கும், ஈரானிலிருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கும், குவைட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4488 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 4 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான ஆயிரத்து 197 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்தநிலையில் தனிமைப்படுத்தப்படாத சுமார் 400 ஊழியர்கள் குறித்த காலப்பகுதியில் காவற்துறையினரால் அறிவிக்கப்பட்;ட பகுதிகளுக்கு சமூகமளித்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார்.

எனினும், தொடர்ந்தும் அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் தலைமறைவாகியிருப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் சுமார் ஆயிரத்து 402 ஊழியர்கள் பணியாற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பணபுழக்கத்தின் ஊடாக கொவிட்-19 பரவும் அபாயம் நிலவுவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.