ஈரான் அச்சுறுத்தல்: உணவு டிரக்கில் மறைந்து துருக்கியில் இருந்து ரகசியமாக வெளியேறிய டிரம்ப் - வாஷிங்டன் போஸ்ட் அம்பலம்
ஈரானின் படுகொலை அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியில் இருந்து ரகசியமாக வெளியேறிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஜூலை மாதம் துருக்கியின் அங்காராவில் நடந்த நேட்டோ வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்டார். கத்தார் நாடு பரிசாக வழங்கிய புதிய போயிங் 747-8 ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் சென்றிருந்தார். ஆனால், மாநாடு முடிந்து திரும்பும் போது, புதிய விமானத்தில் ஏறாமல் பழைய ஏர் போர்ஸ் ஒனில் ஏறினார். இந்த திடீர் மாற்றம் உடனடியாக சந்தேகங்களை எழுப்பியது.
இந்நிலையில், 'தி வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல், டிரம்ப் அன்று பழைய ஏர் போர்ஸ் ஒனில் பயணிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானிடமிருந்து வந்த நம்பகமான படுகொலை அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு சிக்கலான ஏமாற்று நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அந்த நடவடிக்கையின்படி, ஊடக கேமராக்கள் முன்னிலையில் டிரம்ப் பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறி, கையசைத்து உள்ளே சென்றார். ஆனால், சில நிமிடங்களிலேயே அவரும் அவரது சிறிய உதவியாளர்கள் குழுவும், விமானத்தின் மறுபுறத்தில் உள்ள சேவைக் கதவு வழியாக, ஹைட்ராலிக் வசதி கொண்ட விமான நிலைய உணவு டிரக்கில் ஏறினர். அந்த டிரக் தரையில் இறங்கி, ஓடுபாதையில் சென்று அருகில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரக அமெரிக்க ராணுவ விமானமான C-32A (போயிங் 757-ன் மாற்று வடிவம்) அருகில் சென்றது.
இதற்கிடையில், டிரம்ப் விமானத்தில் இருப்பதாக நம்பிய ஊடகவியலாளர்கள் மற்றும் சில வெள்ளை மாளிகை ஊழியர்கள் பழைய ஏர் போர்ஸ் ஒனில் ஏறினர். அவர்களின் ஜன்னல் திரைகளை மூடிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த ஏர் போர்ஸ் ஒன், டிரம்ப் இல்லாமலேயே ஏமாற்று விமானமாக (decoy) புறப்பட்டுச் சென்றது.
டிரம்ப் பயணித்த C-32A விமானம், இங்கிலாந்தின் RAF Mildenhall விமானத் தளத்திற்கு இரவு 10.20 மணியளவில் வந்திறங்கியது. சிறிது நேரத்திற்குப் பின்னர் ஏமாற்று ஏர் போர்ஸ் ஒனும் வந்திறங்கியது. அங்கு டிரம்ப் எவ்வாறு C-32A-லிருந்து பழைய ஏர் போர்ஸ் ஒனுக்கு மாற்றப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரவு 10.56 மணிக்கு, டிரம்ப் பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தின் படிக்கட்டுகளில் இறங்கி வந்ததை ஊடகப் பூல் ஒன்று பதிவு செய்தது. பின்னர், புதிய கத்தார் விமானத்தில் ஏறி அமெரிக்கா திரும்பினார்.
இந்த ரகசிய நடவடிக்கை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "நீங்கள் ஒரு ஆபத்தான விமானத்தில் பயணிக்கிறீர்கள்" என்று டிரம்ப் பதிலளித்தார். வெள்ளை மாளிகை தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் சியுங், "அமெரிக்காவின் எதிரிகள் பலர் ஜனாதிபதியை குறிவைத்துள்ளனர், அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒவ்வொரு கருவியையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
2000-ம் ஆண்டு, அதிபர் பில் கிளிண்டன் பாகிஸ்தானுக்கு சென்றபோதும், ஏர் போர்ஸ் ஒனை ஏமாற்று விமானமாக பயன்படுத்தி, அடையாளமற்ற விமானத்தில் ரகசியமாக பயணித்தது குறிப்பிடத்தக்கது.