ஜேர்மனியில் இருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறும் திட்டத்தை உறுதிசெய்தார் ட்ரம்ப்!

ஜேர்மனியில் இருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறும் திட்டத்தை உறுதிசெய்தார் ட்ரம்ப்!

9,500 அமெரிக்க துருப்புக்களை ஜேர்மனியில் உள்ள தளங்களில் இருந்து திரும்பப் பெறும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பாவின் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) அதன் கூட்டமைப்புகளுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்த மாத தொடக்கத்தில் வீரர்கள் குறைப்பு பற்றிய வதந்திகள் அமெரிக்க ஊடகங்களால் பரப்பப்பட்டன. இந்த பின்னணியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றிய அவர், ‘மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவழிக்கும் நேட்டோவின் இலக்கை அடைய ஜேர்மனி தவறிவிட்டது. ஜேர்மனியுடனான வர்த்தக பேச்சுவார்த்தையும் தற்போது குழப்பம் அடைந்துள்ளது.

அவர்கள் நேட்டோவிற்கு பில்லியன் டொலர்கள் கடன்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அதை செலுத்த வேண்டும்’ என கூறினார்.

பாதுகாப்பு செலவீனங்களுக்கான நேட்டோ உறுப்பு நாடுகளின் பங்களிப்பு எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அத்துடன் ஜேர்மனி நியாயமாக தமது பங்கை செலுத்துவதில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ‘செலவுகளை குறைப்பதற்காக 25,000ஆக வீரர்களைக் குறைக்கப் போவதாகவும், கூட்டணியைப் பராமரிப்பதற்கான செலவுகளைச் சுமக்க நேட்டோ உறுப்பினர்கள் இனி அமெரிக்காவை பெரிதும் நம்பக்கூடாது என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதேவேளை, ஜேர்மனியைப் பாதுகாக்க அமெரிக்க துருப்புக்கள் இல்லை, ஆனால் அட்லாண்டிக் பாதுகாப்பைப் பாதுகாக்கின்றன என அமெரிக்காவின் ஜேர்மனி தூதர் கூறினார்.

அத்துடன், இந்த திட்டம் குறித்து பேர்லினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜேர்மனி தூதர் எமிலி ஹேபர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் ஜேர்மனியில் இருக்க அனுமதிக்கப்பட்ட அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை 52,000 முதல் 25,000 வரை குறைக்க அவர் திட்டமிட்டதாக அறிக்கைகள் வெளிவந்த பின்னர் ட்ரம்பின் கருத்துக்கள் முதல் உறுதிப்படுத்தலைக் குறிக்கின்றன.

தற்போது அங்குள்ள 35,000 பேரில் இருந்து சுமார் 9,500பேர் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் தெரிவித்துள்ளார்.

பல பனிப்போருக்கு முன்னதாகவே அமெரிக்கா பல தசாப்தங்களாக ஜேர்மனியில் அணு ஆயுதங்களைக் குவித்துள்ளது. இது ரஷ்யாவிற்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட 29 நாடுகள் கொண்ட வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என கூறப்படும் நேட்டோ அமைப்பு, கடந்த 1949ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவு உறுப்பு நாடுகளில் ஒன்றுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல் நடந்தால், அது அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படும், மற்ற உறுப்பினர்கள் உதவ வேண்டும் தாக்கப்பட்டால், தேவைப்பட்டால் ஆயுதப்படைகளுடன் களமிறங்க வேண்டும். இதுவே இவ் ஒப்பந்தமாகும்.