நுவரெலியாவில் தனிமை படுத்தப்பட்டவர்களின் விபரங்கள்...!

நுவரெலியாவில் தனிமை படுத்தப்பட்டவர்களின் விபரங்கள்...!

நுவரெலியா மாவட்டத்தில் 123 குடும்பங்களை சேர்ந்த 517 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான அரசாங்க உயர் மட்ட கலந்துரையாடல் இன்று முற்பகல் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலகத்தில்n இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 204 பேருக்கு பி.சீ.ஆர்.சோதனை நிறைவடைந்துள்ளதுடன் ஏனைய 313 பேருக்கான பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அம்பகமுவ பகுதியில் 9 பேரும் பொகவந்தலாவ பகுதியில் 15 குடும்பங்களை சேர்ந்த 80 பேரும் அங்குரண்கெத்த பகுதியில் 26 குடும்பங்களை சேர்ந்த 100 பேரும் கொட்டகலை பகுதியில் 4 குடும்பங்களை சேர்ந்த 4 பேரும் கொத்மலையில் 40 பேரும் மஸ்கெலியாவில் 2 குடும்பங்களை சேர்ந்த 14 பேரும் மதுரட்ட பகுதியில் 5 குடும்பங்களை சேர்ந்த 10 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புதிய திஸ்பனை பகுதியில் 47 குடும்பங்களை சேர்ந்த 200 பேரும், நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட 13 குடும்பங்களை சேர்ந்த 30 பேரும் இராகலை பகுதியில் 4 பேரும் வலப்பனை பகுதியில் 9 குடும்பங்களை சேர்ந்த 26 பேரும் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களை கிராம சேவகர்களும் சுகாதார அதிகாரிகளும் இணைந்து தமக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இதன்போது வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் உதவிகள் தேவைப்படும் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதே நேரம் நுவரெலியாவில் புத்தகசாலை, விக்டோரியா பூங்கா, படகு சவாரி, குதிரை சவாரி மற்றும் உலக முடிவு ஆகிய சுற்றுலா தளங்கள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன.

அத்துடன் நுவரெலியா நகரில் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள உணவகம் ஒன்றும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது.

அந்த உணவக உரிமையாளர்களும் அங்கு கடமை புரிந்தவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 517 பேரில் இதுவரை 204 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர்களில் எவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள 313 பேருக்கு தற்பொழுது பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.

அவர்களுக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றவுடன் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தற்பொழுது நடைபெற்று வருகின்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் 10 ஆயிர்து 874 மாணவர்கள் 83 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு முகம் கொடுத்து வருவதாக நுவரெலியா மேலதிக வலய கல்வி பணிப்பாளர் எம்.மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு தேவையான சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்படடிருக்கின்ற 3 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

அவர்களுக்கு தனியான அறைகள் ஒதுக்கப்பட்டு; பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மேலதிக வலய கல்வி பணிப்பாளர் எம்.மோகன்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுறுதியானவர்களில் 13 பேர் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 5 பேர் நுவரெலியா மாவட்டத்தில் நவதிஸ்பனே, வலப்பனை, ஹங்குரண்கெத்த, கந்தப்பளை, கொட்டகலை ஆகிய பகுதிகளுக்கு பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஓய்வூதிய திணைக்களத்தின் நேரடி தொடர்பு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் இதனை தெரிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை இந்த சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.