
வத்தளையில் உணவுப் பொதி விற்பனை செய்தவருக்கு கொரோனா தொற்று உறுதி!
திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பகுதியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த பகுதியில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக கொழும்பு மெனிங் சந்தையின் 32 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தக நிலையத்தின் பணியாளர் ஒருவரின் மனைவிக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மெனிங் சந்தை பொது வர்த்தக சங்க தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்றுக்குள்ளான பெண்ணின் கணவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வத்தளை ஹெந்தல பகுதியில் உணவுப் பொதி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபரின் மனைவி மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை பணியாளர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர் கடந்த 3 ஆம் திகதி வரை ஹெந்தல பகுதியில் உணவுப் பொது விற்பனை செய்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
எனவே குறித்த நபரிடம் உணவுப்பொதிகளை கொள்வனவு செய்துள்ளவர்கள் பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொள்ளுமாறு சுகாதார அதிகாரிக்ள பொதுமக்களை கோரியுள்ளனர்.