மருமகனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு
லக்கல, தோரபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில், அவரை வைத்தியசாலையில் சேர்க்க பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மா ஓயா, கிராமம் 01 பகுதியைச் சேர்ந்தவராவார்.
முதற்கட்ட விசாரணைகளில், இறந்தவருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், மருமகன் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான மருமகன் அப்பகுதியை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.