
சென்னை மாநகராட்சியை ஏமாற்றினாரா ரஜினி ? 250 சதுர அடி சர்ச்சை சூடு பிடிக்கிறது. லாக் டவுன் காலத்தில் தன் கல்யாண மண்டபத்துக்கு வருமானம் இல்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜனி நீதிமன்றத்தை நாடினார்.
ஆனால் நீதிமன்றம் ரஜினியின் மனுவைத் தள்ளுபடிசெய்து ஒழுங்காக வரிகட்டும்படி கூறியது. அவர் கேட்டதில் என்ன தவறு? ஆம்னி பஸ்காரர்களும்கூட வரி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்களே? ரஜனிக்கு சொத்துவரி தள்ளுபடி அல்லது சலுகை கொடுத்தால், அது மற்ற எல்லாருக்கும்கூட தள்ளுபடி கிடைக்க பயன் தருமே என்று சமூக வலைதளத்தில் பலரும் கேட்டனர். ஆனால், சொத்துவரி என்பது வேறு, வருமான வரி அல்லது சேவை வரி என்பது வேறு என்பது புரியாமல் கேட்டனர் என்றே கொள்ளவேண்டும்.
கல்யாண மண்டபம் வாடகைக்கு விடப்படுகிறது. அதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. அந்த வருமானத்துக்கு வரி செலுத்தப்பட வேண்டும். லாக்டவுன் காரணமாக வருமானமே இல்லை என்றால், வருமான வரி கிடையாது. கல்யாண மண்டபம் ஒரு சேவை வழங்குகிறது. அந்த சேவைக்கு கட்டணம் கிடைக்கிறது. அதற்கு சேவை வரி செலுத்தலாம். லாக் டவுன் காரணமாக சேவையே வழங்கப்படவில்லை, எனவே வருவாய் இல்லை, எனவே சேவை வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால் சொத்து வரி என்பது அப்படியல்ல. சொத்தின் வருவாய் எவ்வளவு கிடைக்கக்கூடும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில்தான் சொத்துவரி போடப்படுகிறது என்றாலும், சொத்து என்பது நிலையானது. வருவாயே இல்லாவிட்டாலும் சொத்துவரி உண்டு.
உதாரணமாக, எனக்கு ஒரு வீடு இருக்கிறது. அதில் நான் குடியிருக்கிறேன், அல்லது வாடகைக்கு விட்டிருக்கிறேன், அல்லது பூட்டியே வைத்திருக்கிறேன். எப்படி வைத்திருந்தாலும் அதற்கு சொத்து வரி உண்டு. ஏனென்றால், சொத்துவரியைக் கொண்டுதான், அந்தப் பகுதிக்கான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட குடிமை வசதிகள் தரப்படுகின்றன. உங்கள் வீட்டில் நீங்கள் குடியிருந்தாலும் சரி, வாடகைக்கு விட்டிருந்தாலும் சரி, சும்மா பூட்டி வைத்திருந்தாலும் சரி, அந்தப் பகுதிக்கு இந்தச் சேவைகள் எல்லாம் கிடைத்தாக வேண்டும். எந்தெந்த வீட்டில் ஆள் இல்லை, எந்தெந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள் என்று பார்த்துப் பார்த்து, பயன்படுத்தப்படும் காலத்துக்கு மட்டும் சொத்து வரி விதிக்க முடியாது. அப்படிச் செய்வதாக இருந்தால், நம் மக்கள் அதிலும் பெரிய வேலையைக் காட்டி விடுவார்கள். வரிக்கணக்கு எடுக்க வரும்போது வீட்டைப் பூட்டி வைத்துவிட்டு, இங்கே யாரும் இல்லை, அதனால் சொத்துவரி கூடாது என்று சொல்லி விடுவார்கள்.
வருவாய் இருந்தால்தான் சொத்துவரி கட்டுவேன் என்றால், சில மாதங்களில் ஏகத்துக்கு புக்கிங் ஆகி, செம்மையாக கல்லா கட்டும்போது கூடுதலாக சொத்துவரி கட்டுகிறார, இல்லைதானே? அதனால்தான் சொத்துவரி என்பது, அந்தந்தப் பகுதியின் மனை விலை மதிப்பு, கட்டுமானம், அதன் வருவாய் ஆகிய பல விஷயங்களின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது. அதற்கென்று ஒரு சூத்திரம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் கூகுளில் தேடிப் பார்க்கலாம்.
ரஜனியின் கல்யாண மண்டபத்துக்கான சொத்து வரி பாக்கி எவ்வளவு என்று மாநாகரட்சி தரப்பில் தொகையை ஊடகங்களுக்கு தெரிவித்துவிட்டார்கள். ரஜினியின் கல்யாண மண்டபம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆனால், சொத்துவரி நோட்டீசின் அடிப்படையில் பார்த்தால், 2018இல்தான் கட்டப்பட்டது என்று காட்டுகிறது. இது மிகப்பெரிய வியப்பளிக்கும் செய்தி. சொத்துவரி நோட்டீசின் கணக்குப்படி, அதன் பில்ட்-அப் ஏரியா என்பது கிரவுண்ட் ஃப்ளோர் 250 சதுர அடி. அதாவது, சுமாராக வெறும் 15 அடி x 17 அடி அகலக் கட்டிடம்தான்! இது வியப்பளிப்பது மட்டுமல்ல, அதிர்ச்சி தருவதும்கூட. பணக்காரர்களும் மேல் வர்க்கத்தினரும் மட்டும் அவ்வளவு பெரிய கட்டிடத்தை வெறும் 250 சதுர அடியில் கட்டும் தொழில்நுட்பத்தை செயலாக்கிய ரஜனிக்கும் சென்னை மாநகராட்சியில் சிலருக்கும் சேர்த்து விருதளித்துப் பெருமைப்படுத்த வேண்டும்.
அல்லது, இதில் இன்னும் எவ்வளவு ஊழல் என்று ஆராய வேண்டும். அல்லது, நோட்டீசில் தவறு நேர்ந்து விட்டது என்று மாநகராட்சி நிரூபிக்க வேண்டும். இந்த இரண்டில் எது நடந்தாலும் சிஸ்டம் ஓரளவுக்கு தமிழ்நாட்டில் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.