
மனைவி ஓட்டிவந்த காரில் மோதுண்டு கணவன் பலி!
மனைவி ஓட்டிவந்த காரில் மோதுண்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
போதைப் பொருளுக்கு அடிமையாகியிருந்த நபரே இவ்வாறு மனைவியின் காரில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஹெரோயின் போதைப் பொருளுக்கு கடுமையாக அடிமையாகி இருந்த 42 வயதான கணவர் அடிக்கடி ஹெரோயினை பயன்படுத்த பணம் கேட்டு, சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினமும் இருவருக்கிடையில் சண்டை நடைப்பெற்றுள்ளது.
இது குறித்து கஹாத்துடுவ பொலிஸ் நிலையத்திற்கு மனைவி முறைப்பாடு செய்து விட்டு, காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பொல்கஸ்ஹோவிட்ட வெலகும்புர வீதியில் கால்வாய் ஒன்றுக்கு அருகில் மறைந்திருந்த கணவன் காருக்கு முன்னால் பாய்ந்துள்ளார்.
எனினும் காரை நிறுத்தாத மனைவி மீண்டும் பொலிஸ் நிலையம் நோக்கி காரை செலுத்தியுள்ளார். எனினும் இந்த சம்பவத்தில் காரில் மோதுண்ட கணவன் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து மனைவி ஓட்டிய வண்டியில் மோதுண்டு காயமடைந்த கணவர் தெஹிவளை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபரின் மனைவியை கஹாத்துடுவ பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக கஹாத்துடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.எச். விக்ரமரத்ன தலைமையிலான அணியினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்