
ஜனாதிபதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரின் விளக்கமறியல் நீடிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையெழுத்தை மற்றும் கடித தலைப்பு என்பவற்றை மோசடியாகப் பயன்படுத்திய நபரை எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த இந்நபர், கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுடன் மீள சேவையில் இணைத்துக் கொள்ளும்படி குறிப்பிட்டு ஜனாதிபதியின் கடித தலைப்பில் அவரது கையொப்பத்துடனான கடிதமொன்றை கடந்த மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கியின் தலைவருக்கு அனுப்பியிருந்தார்.
அது போலியானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குமார என்ற குறித்த நபரை வங்கியின் தலைமையகத்திற்கு அழைத்த பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.
கடிதத்தை தயாரிக்க பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் ஏனைய உபகரணங்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் குருநாகல்-கத்தம்பலாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.