சுமார் ஆயிரம் கோடி ரூபா செலவாகும்

சுமார் ஆயிரம் கோடி ரூபா செலவாகும்

பொதுத் தேர்தலுக்காக சுமார் ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஒத்துழைப்பையும், அதற்காக செலவாகும் நிதி ஒதுக்கீடுகளையும் பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பானதும், சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், ஜனாதிபதியை நேற்று பிற்பகல் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தி தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இதன்போது உறுதியளித்துள்ளார். சில மாதங்களாக பின்பற்றிய சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலைமை குறித்து மக்கள் தெளிவுடன் இருப்பதன் மூலம் எவ்வித சுகாதார பிரச்சினையுமின்றி தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியும் என்றும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், தேர்தலுக்கான அடிப்படை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட ஏனைய அனைத்து தரப்பினரதும் பங்களிப்பை பெற்றுக்கொள்வதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதன்போது தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைகளுக்காக அதிகாரிகளின் கட்டாயமான பங்கேற்பை உறுதிசெய்வதற்கு சட்ட ரீதியான அடிப்படை ஒன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அவர், அதன் பணிப்புரைகளை தாபனக் கோவையில் உள்ளடக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பொதுக்கூட்டங்களில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கை மற்றும் வீடுகளுக்கு சென்று செய்யப்படும் பிர்சாரத்தின் போதான சுகாதாரப் பாதுகாப்பு குறித்து அனைத்து தரப்பும் பொறுப்புடன் செயற்படுவது தேர்தலை வெற்றிகரமாக செய்வதற்கு உதவும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.

தேர்தல் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் கொவிட்-19 ஒழிப்பு பரிந்துரைகளை வர்த்தமாணி மூலம் அறிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆணைக்குழுவின் தவிசாளர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், சுகாதார சட்ட திட்டங்களுக்கு ஏற்ப வாக்களிப்பு நிலையங்களில் இடவசதி பிரச்சினை ஏற்பட்டால் தேவையான உதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி இதன்போது இணக்கம் தெரிவித்தார்.

ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும், தேர்தலின் பின்னர் குறித்த பகுதிக்கு மீண்டும் திரும்பும் மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை திட்டமிடுவது குறித்தும் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.