நாளை தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு- தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கான அறிவிப்பு

நாளை தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு- தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கான அறிவிப்பு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு தொழிலுக்காக அந்த பகுதிகளில் இருந்து வெளியில் செல்ல நாளை முதல் அனுமதி வழங்கப்பட மாட்டாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் அறிவுறுத்துவதற்காக இன்று மாலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் எவரும் நுழையவோ, வெளியேறவோ முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

அதனை மீறினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும் என அவர் எச்சரித்துள்ளார்.

அதேநேரம் மேல் மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்களும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ், கரையோர பிரதேசம், ஆட்டுப்பட்டித்தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, பொரளை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, முகத்துவாரத்தின் ரண்மின செவன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளிச் செல்லவோ, அல்லது உட்பிரவேசிப்பதற்கோ அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா-எல, சபுகஸ்கந்தை ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, இங்கிரிய காவற்துறை அதிகார பிரதேசங்களிலும், வேகட - மேற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் - குருநாகல் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், குளியாப்பிட்டி, மாவனெல்ல, ருவான்வெல்ல ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.