
மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல தற்காலிக தடை
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை எந்தவொரு காரணத்திற்காகவும் மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாகாணங்களுக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரால் ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அனைத்து போக்குவரத்து சேவைகளும் மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் இடம்பெறவுள்ளதுடன் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொவிட் 19 நிலையை கருத்தில் கொண்டு சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய சில நாட்களுக்காக இந்த பயணக்கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாகாணங்களுக்கு செல்வதற்கான அனுமதியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம் மேல் மாகாணத்தில் இருந்து வெளி பிரதேசங்களுக்கு தொடருந்து சேவைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை சில தொடருந்து சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.