
கொரோனாவுக்கு பலியானவரை கொண்டு செல்வதாக தெரிவித்த சவப்பெட்டியை திறந்து பார்த்து மிரண்டு போன பொலிஸார்
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை சவப்பெட்டியில் கொண்டு செல்வதாக தெரிவித்து போதைப்பொருள் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடாக பிரேசில் இருந்து வருகிறது.அங்கேயே இந்தச்சம்பவம் நடந்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பிரேசிலின் மடோ க்ராஹோ டி சுலா மாகாணத்தின் பொன்டா போரா என்ற பகுதியில் பொலிசார் வழக்கமான வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவ்வேளை அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
அந்த காரின் சாரதி, தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் தனியார் அமைப்பில் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இரண்டு உடல்களை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து அந்த நபரிடம் தனது அடையாள அட்டையை காட்டும்படியும், உயிரிழந்தவர்களின் விபரங்களை காட்டும்படியும் பொலிசார் தெரிவித்தனர்.
ஆனால் சாரதி முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொலிசார் காரில் இருந்த 2 சவப்பெட்டிகளை திறந்து பார்த்தனர்.
அதில் சுமார் 290 கிலோ அளவுக்கு போதை பொருட்கள் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை அடுத்து சாரதியை கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா காலத்தில் வைரஸுக்கு பலியானவரை கொண்டு செல்வதாக கூறி சவப்பெட்டிக்குள் போதைப்பொருள் கடத்திய சம்பவம் பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.