ஜம்மு-காஷ்மீரில் மோதல்: 8 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் மோதல்: 8 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடுச் சம்பவத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மற்றும் பாம்பூர் பகுதிகளில் இந்த மோதல்கள் இடம்பெற்ற நிலையில், பாம்பூர் பகுதி மசூதிக்குள் இருந்த இரு தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் வெளியேற்றினர். தீவிரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல்களைப் பெற்றபின்னர் பாதுகாப்புப் படையினர் நேற்று (வியாழக்கிழமை) காலை ஷோபியன் மற்றும் பாம்பூர் பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கினர். இதன்போது, ஷோபியனில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் பாம்பூரில் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டம் பாம்பூரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். ஆனால் மேலும் இருவர் அருகிலுள்ள மசூதிக்குள் அடைக்கலம் புகுந்தனர் என அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் மசூதியில் அடைக்கலம் புகுந்த இரண்டு தீவிரவாதிகளை அங்கிருந்து வெளியேற்றப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை மட்டுமே பயன்படுத்தியதாக காஷ்மீர் பொலிஸ் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார்.