
ஒக்டோபர் மாதம் முதல் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டம்
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கொவிட் -19 தொற்றிலிருந்து மேலும் 378 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் கொரோனா நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரைக்காலமும் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 644 ஆக குறைவடைந்துள்ளது.
நாட்டில் நேற்று வரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கோவிட் 19 பரவலை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 834 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 640 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 571 பேருக்கும், குருநாகல் மாவட்டத்தில் 226 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.