
திறக்கப்பட்ட 11 கிளைகளை அதிரடியாக மூடிய ஆப்பிள் நிறுவனம்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அங்கு இதுவரையில் 22 இலட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டன. குறிப்பாக ஆப்பிள் நிறுவனமும் அமெரிக்காவில் செயல்பட்டுவந்த 271 கிளைகளையும் மூடியது. பின்னர் வைரசின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்கட்டமாக 100 கிளைகளை மட்டும் மீண்டும் திறந்தது. ஆனால் தற்போது, அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அரிசோனா, புளோரிடா போன்ற மாகாணங்களில் கொரோனா பரவுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா தீவிரமடைந்துவரும் அரிசோனா, புளோரிடா, வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினா ஆகிய 4 மாகாணங்களில் திறக்கப்பட்ட 11 கிளைகளை ஆப்பிள் நிறுவனம் மீண்டும் மூடியுள்ளது. இந்த 4 மாகாணங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் அங்கு செயல்பட்டு வரும் 11 கிளைகளையும் தற்காலிகமாக மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த 11 கிளைகளும் மீள் அறிவித்தல் வரை மூடப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.