
நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!
நாட்டில் நேற்றைய தினம் 392 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 3 பேரும் அடங்குகின்றனர்.
ஏனைய அனைவரும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி பேலியகொடை - திவுலபிட்டி இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்களி;ன மொத்த எண்ணிக்கை 13,000;,ஐ கடந்தது.
அந்த கொத்தணியுடன் தொடர்புடையவர்களின் மொத்த எண்ணிக்கை 13084 ஆகும்.
இந்தநிலையில் நாட்டின் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 16,586 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை. நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைந்து நேற்றையதினம் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேல்மாகாணத்தில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவவதாக தொற்று நோய் விஞ்ஞானபிரிவின் மருத்துவர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மாநகர சபை அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் இந்த அச்சுறுத்தல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, கண்டி நகர் கொவிட் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக கண்டி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை பிரதி மா அதிபர் சுகத் மாஹசிங்க தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் போகம்பறை சிறைச்சாலையில் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அதன் பணியாளர்கள் கண்டி நகருக்கு செல்வதே இதற்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போகம்பறை சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்றுறுதியாகும் கைதிகள் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போகம்பறை சிறைச்சாலையில் இதுவரையில் 125 கைதிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
பழைய போகம்பறை சிறைச்சாலையில் 100 கைதிகளை மாத்திரமே தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும் அண்மையில் அந்த சிறைச்சாலையில் கைதிகள் முன்னெடுத்த போராட்டத்தின் பின்னர் மேற்கொண்ட கண்காணிப்பின் போது 809 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் போகம்பறை சிறைச்சாலையின் பணியாளர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக கண்டி நகருக்கு பிரவேசிப்பதால் அது பாரிய அச்சறுத்தலாக அமையக்கூடும் எனவும், பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சுகத் மாஹசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் நேற்றையதினம் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு இதுவரையில் மொத்தமாக கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 75ஆகவும் உயர்ந்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கொவிட்19 சிகிச்சைகளுக்காக மேலும் சில வைத்தியசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ளீர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.