தனது பிறந்த நாளான இன்று சகோதரர்களுடன் அனுராதபுரம் விரைந்த கோட்டாபய!

தனது பிறந்த நாளான இன்று சகோதரர்களுடன் அனுராதபுரம் விரைந்த கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனது 71வது பிறந்த தினமான இன்று அனுராதபுரத்திற்கு பயணமாகியுள்ளார்.

1949 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி பிறந்த கோட்டாபய ராஜபக்ச, கொழும்பு ஆனந்த கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்றார்.

1971 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்துக்கொண்ட அவர், சென்னை இராணுவ பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான பட்டப்பின்படிப்பை கற்றுள்ளார்.

பாகிஸ்தான், இந்தியா நாடுகளில் மாத்திரமல்லாது அமெரிக்காவிலும் உயர் மட்டப் பயிற்சி பாடநெறிகளை அவர் பூர்த்தி செய்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டமைக்காக அவருக்கு ரண சூர பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

லெப்டினட் கேர்ணலாக இராணுவத்தில் இருந்து கடந்த 1991 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழிற்நுட்பட பாடநெறியை பூர்த்தி செய்து விட்டு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு கலிப்போர்னியா லயோலா சட்டக் கல்லூரியில் தகவல் தொழிற்நுட்பவியலாளராக கடமையாற்றியுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதை அடுத்து, இலங்கை திரும்பிய கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றினார். இவர் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்திலேயே கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட இன ரீதியான உணர்வுகள் மற்றும் கோரிக்கைக்காக கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இன்றைய தினம் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுராதபுரம் ருவான்வெலி மஹா சேய அருகில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர் சமல் ராஜபக்ச, இராணுவ தளபதி சவேந்திர சில்வா உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.