இத்தாலியில் கடந்த டிசம்பர் மாதமே கொவிட்-19 தொற்று பரவியது!

இத்தாலியில் கடந்த டிசம்பர் மாதமே கொவிட்-19 தொற்று பரவியது!

இத்தாலியில் கடந்த டிசம்பர் மாதமே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று முதல் முதலாகக் கண்டறியப்பட்டதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இத்தாலியில் சுகாதாரப் பணிகளின் ஒரு பகுதியாக, அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள கழிவு குழாய்களிலிருந்து மாதிரிகள் அவ்வப்போது சேகரிப்பட்டு ஆய்வுக்குள்படுத்தப்படுவது வழக்கம்.

இதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை வடக்கு இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 40 கழிவு நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அந்த மாதிரிகளில் கொவிட்-19 தீநுண்மி உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது.

அதில், மிலான், டுரின் ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில் கொவிட்-19 தீநுண்மி இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பகுதிகளில் அதற்கு முன்னர் சேகரிக்கப்பட்ட கழிவு நீர்களில் அந்தத் தீநுண்மி இல்லை.

இதன் மூலம், கடந்த டிசம்பர் மாதத்திலேயே மிலான் உள்ளிட்ட பகுதிகளில் கொவிட்-19 நோய்த்தொற்று மனிதர்களிடையே பரவி வந்திருப்பது தெரிய வந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதற்கமைய, இத்தாலியில் கொரோனா நோய்த்தொற்று (கொவிட்-19) முதல் முதலாகக் கண்டறியப்பட்டதற்கு இரு மாதங்களுக்கு முன்னரே, அங்கு அந்த நோய் பரவி வந்ததாக தெரியவந்துள்ளது.

எனினும், கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட யாருக்கும், அந்தத் தீநுண்மி இருந்த கழிவு நீர் மாதிரிகளுடன் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி, இத்தாலிக்கு வந்த 2 சீன சுற்றுலா பயணிகளுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது முதல் முறையாக உறுதி செய்யப்பட்டதும், பிற ஐரோப்பிய நாடுகளைவிட மிகவும் துரிதமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை இத்தாலி முழு வீச்சில் முடுக்கி விட்டது. சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இத்தாலிதான் முதல் முறையாக தடை விதித்தது.

கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி வரை பெரும்பாலான நாடுகளைப் போல் இரண்டொரு மரணங்கள், நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு பாதிப்பு என்றிருந்த இத்தாலியில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அந்த நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இத்தாலி சீனாவை முந்தியது.

கொவிட்-19 நோய்த்தொற்று சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே இத்தாலியில் பரவி வந்துதான் இதற்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.