
பிரான்ஸ் முழுதும் குவிக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான காவல்துறையினர்
பிரான்ஸில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இப்பொழுது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளைக் கவனிக்க கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் Gérard Darmanin நேற்று வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நிலவும் கொரோனா தொற்று இரண்டாவது அலையின் காரணமாக 12 லட்சம் பேர் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கட்டுப்பாடுகளை மீறியதன் காரணமாக ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் இப்பொழுது காவல்துறையினர் கட்டுப்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன.
குறிப்பாக Pas-de-Calais மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் நான்கு தடவைகள் உள்ளிருப்பு நடவடிக்கையை மீறினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.