ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்து ஆலயம் கண்டுபிடிப்பு

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்து ஆலயம் கண்டுபிடிப்பு

பாகிஸ்தானில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்து - விஷ்ணு ஆலயம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்லியல் ஆய்வாளர்கள் இணைந்து, பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணம், ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள பாரிகோட் குண்டாய் மலைப் பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது விஷ்ணு கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கைபர் பக்துன்கவா தொல்லியல் துறையைச் சேர்ந்த பசல் காலிக் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், இந்து சாஹி அரச வம்ச காலத்தில், சுமார் ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

ஸ்வாத் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல உள்ளன.

இருப்பினும் இந்து சாஹி அரச வம்சத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றார்.