
பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் இன்று முதல் மேற்கொள்ளவுள்ள செயற்பாடு!
பெண்களுக்கு எதிரான பால் நிலை வன்முறையினை இல்லாதொழிக்க இன்றிலிருந்து தொடர்ச்சியாக 16 நாட்கள் விழிப்புணர்வு செயற்பாடு யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட செயலக அலுவலர்களின் பங்குபற்றுதலோடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .
கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து ஜெசாட் தனியார் தொண்டு நிறுவனத்தினரால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று நோயின் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு பெண்கள், பெண் பிள்ளைகள் உள்ளாகியுள்ள நிலையில் இந்த வருடத்திற்கான தொனி பொருளாக "கொவிட்19 பாதிப்பின் ஊடாக வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வன்முறையிலிருந்து வெளியே கொண்டுவருதல்" எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இன்றிலிருந்து வருகிற 16 நாட்கள் இந்த செயற்திட்டம் இடம்பெறவுள்ளது. இம்முறை தொடர்ச்சியாக டிஜிட்டல் மற்றும் ஊடகங்கள் ஊடாக இந்த செயற்பாடுகளை செயற்படுத்த உள்ளார்கள். அதன் அடிப்படையில் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபரினால் இந்த இந்த திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 16 நாட்கள் அரச உத்தியோகத்தர்கள் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்கள் அவர்களுடைய பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் கருத்தரங்கானது மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.