
இந்திய - சீன மோதலில் ட்ரம்பின் தலையீடு: தயார் நிலையில் அமெரிக்கா!
இந்திய - சீன எல்லைப் பிரச்சினைகளில் இருந்து இருநாடுகளும் மீண்டு வர, அவர்களுக்கு உதவுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவும் சீனாவும் கடினமான சூழலில் உள்ளன. இந்தியா மற்றும் சீனாவுடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். மிகப்பெரும் பிரச்சினையை அவர்கள் கொண்டுள்ளனர். என்ன நடக்கிறது என்று நாம் பார்ப்போம்.
பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு உதவுவதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோமென அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15 ஆம் திகதி இந்திய இராணுவத்திற்கும் சீனா இராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் உயிர்பலிகள் ஏற்பட்டுள்ள்ளது. எனினும், சீன வீரர்கள் எத்தனை பேர் இந்த மோதலில் பலியாகினர் என்ற துல்லியமான தகவல்களை வெளியிடவில்லை. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.