
காரைநகர் கொரோனா தொற்றாளரினால் யாழில் மூடப்படுகின்றது மேலும் சில பகுதிகள்!
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மற்றும் 4 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் - கொழும்பு பயணிகள் மற்றும் பொருள்கள் சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பேருந்து மற்றும் பாரவூர்தி வாடிக்கையாளர் நிலையமும் புடவையகம் ஒன்றும் நாவாந்துறையில் ஒரு வியாபார நிலையமும் இவ்வாறு உடனடியாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே யாழ்.மாநகர சபை பிரிவில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் 3வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
தனியார் வைத்தியசாலையின் பணியாளர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.