
வேலணையிலும் உறுதிப்படுத்தப்பட்டது கொரோனா தொற்று! உடனடியாக முடக்கப்படும் பகுதிகள்
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபருக்கே இன்று தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அவர் கொவிட் - 19 சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படவுள்ளார் என தெரிவித்தார்.
யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்று தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 200 பேரிடம் எழுமாற்றாக எடுக்கப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதில் வேலணை புளியங்கூடல் வீதித் திருத்தப்பணிக்கு வருகை தந்த தென்னிலங்கையைச் சேர்ந்த சுயதனிமைப்படுத்தப் பட்டிருந்தவர்களும் அடங்கியிருந்தனர்.
இந்த நிலையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 199 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.
இதனால் புளியங்கூடல் பகுதியில் 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2 வர்த்தக நிலையங்கள் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இன்று காலை உடனடியாக மூடப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையினர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.