
பிடியாணை இன்றி கைது செய்க: மகிந்த தேசப்பிரிய கடும் சீற்றம்!
பொதுத் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட சுவரொட்டிகள், தட்டிகள் மற்றும் இலக்கங்களை காட்சிப்படுத்துவது பிடியாணை இன்றி கைது செய்யக் கூடிய குற்றமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தல் அலுவலகங்களின் கட்சி மற்றும் சின்னத்தை காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் வேட்பாளரின் புகைப்படம் மற்றும் இலக்கங்களை காட்சிப்படுத்த அனுமதியில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் வாக்கெடுப்பு சட்டத்தை அமுல்படுத்துவது சம்பந்தமான பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
தேர்தல் அலுவலகங்களில் தட்டிகளை காட்சிப்படுத்த இடமளிக்காத நடவடிக்கையானது தேர்தல் ஆணைக்குழுவில் நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினை.
எது எப்படி இருந்த போதிலும் தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டால் பொலிஸார் அதற்கு எதிராக வழக்கு தொடர்வார்கள்.
தற்போது ஒத்திகை தேர்தல்கள் நடத்தப்பட்டு வருவதுடன் நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி விக்ரமசிங்கபுர சமூக நிலையம் மற்றும் தெமட்டகொடை சாம விகாரை ஆகியவற்றில் ஒத்திகை தேர்தல் நடத்தப்பட்டது.
நாட்டில் தற்போது காணப்படும் நிலைமைக்கு அமைய வாக்களிக்கும் நேரத்தை மாலை 5 மணி வரை நீடிப்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.