
புதுக்குடியிருப்பில் வெடிமருந்துடன் கைதானவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் வெடிமருந்து வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு பதில் நீதவான் ப.சுதர்சன் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெடி மருந்துடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
24 மற்றும் 25 வயதுடைய இருவரிடமிருந்து 200 கிராம் ரி.என்.ரி. வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
குறித்த வெடி மருந்துகளை விடுதலைப் புலிகள் ஆயுதம் தயாரித்த உடையார்கட்டு குரவயல் பகுதியிலிருந்து தோண்டி எடுத்துள்ளதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குரவயல் பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வு பணிகளை முன்னெடுக்க புதுக்குடியிருப்பு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கடந்த வருடம் 52 கிலோ கிராம் TNT வெடி மருந்துடன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.