
ட்ரம்பின் பேரணி ஊழியர்களுக்கு கொரோனா- எதிர்க்கட்சிகள் விமர்சனம்
தேர்தலில் வெற்றி பெற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க மக்கள் மீது அக்கறை இல்லாமல் பேரணி நடத்தி வருகிறார் என ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் வெற்றி பெற அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடேனும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பும் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ட்ரம்ப் இந்த மாதம் முதல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார். இதனையடுத்து நியூயோர்க், கலிஃபோர்னியா உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ட்ரம்பின் பேரணிக்கு கொரோனா தாக்கம் குறைவாக உள்ள ஆக்லஹோமா மாகாணம் தெரிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ட்ரம்பின் ஆக்லஹோமா பேரணியில் கலந்துகொள்ள இருந்த ஆறு குடியரசுக் கட்சி ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இது அமெரிக்க எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற ட்ரம்ப் அமெரிக்க மக்கள் மீது அக்கறை இல்லாமல் பேரணி நடத்தி வருகிறார் என ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஆக்லஹோமாவின் துல்சா பகுதியில் நேற்று மட்டும் 2,206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ட்ரம்ப் தன் தேர்தல் வெற்றிக்காக இங்கு பேரணி நடத்துவது பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பை உண்டாக்கும் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.