
வடக்கில் இருந்த கொரோனா நோயாளர்கள் இடமாற்றம்
வடக்கின் மருதங்கேணி மற்றும் முள்ளியவளை ஆகிய கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தொற்று நோயியல் மருத்துவமனைக்கே இன்று ஞாயிற்றுக் கிழமை மாற்றம் செய்யப்பட்டனர்.
இதன்படி யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 30 பேர் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் அமைக்கப்பட்ட தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் முல்லைத்தீவு - முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரும் குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருதங்கேணி வைத்தியசாலை தற்காலிக கொரோனா தொற்று சிகிச்சை நிலையமாக பயன்படுத்தப்பட்ட நிலையில், அதன் வெளிநோயாளர் பிரிவு பிரிதொரு இடத்தில் இயங்கி வந்தது.
அங்கிருந்த கொரோனா நோயாளர்கள் கிஷ்ணபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், எதிர்வரும் நாட்களில் மருதங்கேணி வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அதி நவீன கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசத்தின் பாதுகாப்பும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தொற்றுநோயியல் வைத்தியசாலை கொரோனா சிகிக்சை நிலையமாக இன்று முதல் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.