வாக்குரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .

வாக்குரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளவர்களினதும், சிறைக்கைதிகளினதும் வாக்குரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் நிறைவேற்று பணிப்பாளர் சுரங்கி ஆரியவங்ச இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

சிறைக்கைதிகளுக்கு வாக்குரிமைக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுவரையில் எந்தவொரு தரப்பினராலும் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு அவதானம் செலுத்தப்படாமையானது கவலைக்குரிய விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தேர்தல் காலப்பகுதியில் எவரேனும் தங்கவைக்கப்பட்டிருப்பார்களாயின் அவர்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் உள்ள நிலையில், அதனை பறிப்பதற்கான உரிமை வேறு எந்தவொரு தரப்பினருக்கும் இல்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஒன்றியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுரங்கி ஆரியவங்ச குறிப்பிட்டுள்ளார்.