
கொரோனாவால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏற்பட்ட பெரிய நஷ்டம்
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த கடனில் பெருந்தொகை அரசுக்கே செலுத்த வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் அசோக் பதிரகே தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கிக்கு 220 மில்லியன் டொலர்களும், மக்கள் வங்கிக்கு 187 மில்லியன் டொலர்களும், வரையறுக்கப்பட்ட இலங்கை வணிக கூட்டுத்தாபனத்திற்கு 275 மில்லியன் டொலர்களையும் கடனாக செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை தாம் உட்பட பணிப்பாளர் சபையினருக்கு ஒரு வருடத்தில் இலாபமீட்டும் நிறுனமாக மாற்ற முடியும் என எண்ணியதாகவும் கொரோனா வைரஸ் அதற்கு தடையாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த ஆண்டு 130 மில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளது.
கொரோனா காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதால், தமது நிறுவனத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் பதிரகே சுட்டிக்காட்டியுள்ளார்.