வாக்குமூலம் வழங்க நான் தயார்...!

வாக்குமூலம் வழங்க நான் தயார்...!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழர் மகாசபாவின் வேட்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், நாளையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பாறையில் - நாவிதன்வெளியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், தாம் விடுதலைப் புலிகளில் இருந்த போது, ஆணையிரவில் ஒரே இரவில் 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இது அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, பதில் காவற்துறை மா அதிபர் அறிவுறுத்தி இருந்தார்.

இதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாவதற்காக, விநாயகமூர்த்தி முரளிதரன் அம்பாறையில் இருந்து கொழும்புக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக எமது செய்தி சேவையிடம் இன்று பிற்பகல் கருத்து தெரிவித்த அவர், தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.