பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சரின் தீர்மானம்

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சரின் தீர்மானம்

தற்போதைய சூழ்நிலையில் பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என்றும் ஏதேனும் சலுகை தேவைப்படின் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமக்கு போதிய ஆதாயம் கிடைக்கவில்லை எனவும் கடந்த இரண்டு வருடங்களில் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாமல் இருப்பதன் காரணமாக பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறும் குறித்த சங்கம் அமைச்சரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், கொவிட் 19 வைரஸ் காரணமாக அனைத்து தரப்பினரும் வருமான இழப்பை எதிர்கொண்டு வருவதன் காரணமாக பேருந்து கட்டண அதிகரிப்புக்கு இது பொருத்தமான காலம் அல்லவெனவும் ஏற்கனவே தனியார் பேருந்துகளுக்காக அரசாங்கத்தினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது குறிப்பிட்டார்.