
ஒகஸ்ட் மாதத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் ஹோட்டல்களில் தங்குவதற்கு அனுமதி!
நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹோட்டல்களில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 5 ஆயிரம் ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாடு முழுவதும் 20 ஆயிரம் பதிவு செய்யப்படாத சுற்றுலா விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இதுவரை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதி செய்யப்படாத சுற்றுலா விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவற்றை பதிவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் பிரசன்ன வலியுறுத்தி உள்ளார்.
அத்துடன், ஒகஸ்ட் 1ஆம் திகதி முதல் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு நாட்டுக்கு வரும் அழைத்துவரப்படும் சுற்றுலா பயணிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.