
சீன அதிகாரிகளுக்கு மேற்கொண்டு எந்த தடையும் விதிக்கப் போவதில்லை – ட்ரம்ப்
சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் நன்னடத்தை முகாம்களில் அடைக்கப்பட்ட விவகாரத்தில், சீன அதிகாரிகளுக்கு மேற்கொண்டு எந்த தடையும் விதிக்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஜின்ஜியாங் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நன்னடத்தை முகாம்களில் சுமார் 10 இலட்சம் உய்குர் முஸ்லிம்களும் பிற சிறுபான்மை இனத்தவரும் அடைத்துவைக்கப்பட்டு, பலவந்தமாக அவர்கள் வாழ்க்கை முறை மாற்றப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு அங்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை என்று கூறும் சீனா அவர்களை நல்வழிப்படுத்துவதாகக் கூறுகிறது. எனினும் இது குறித்து சர்வதேச சமூகங்கள் தொடர்ச்சியாக சந்தேகம் எழுப்புகின்றன.
மேலும் ட்ரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து பதவி விலகிய ஜான் போல்டன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில், ஜின்ஜியாங் மாகாண நன்னடத்தை முகாம்கள் அமைப்பது சரியான செயல் என்று ஒரு உச்சிமாநாட்டில் ஷி ஜின்பிங்குக்கு ட்ரம்ப் நற்சான்றிதழ் வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆக்சியாஸ் செய்தி தளத்திற்கு ட்ரம்ப் வழங்கிய நேர்காணலில், “மிகப் பெரிய வணிகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் நாம் மேற்கொண்டு தடைகளை விதித்துக்கொண்டே போக முடியாது. ஏற்கெனவே நான் இறக்குமதி வரியை உயர்த்திவிட்டேன். தடை விதிப்பதைவிட இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது”’ என கூறியுள்ளார்.
இதேநேரம், அமெரிக்க விவசாய விளைபொருட்களை வாங்கி, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற உதவும்படி சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் கேட்டீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், ‘இல்லவே இல்லை. சீன ஜனாதிபதியிடம் மட்டுமல்ல. நான் நம் நாட்டுடன் வணிகம் செய்ய கூறி அனைவரிடமும் கேட்கிறேன். நம் நாட்டுக்கு எது நல்லதோ அதுதான் எனக்கும் நல்லது’ தெரிவித்துள்ளார்.