நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரிப்பு!
நாட்டில் கொவிட் நோய் காரணமாக மேலும் 3 பேரின் மரணங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்த, மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 93 வயதான பெண் ஒருவர் கடந்த 30ஆம் திகதி மரணமடைந்தார்.
கொவிட்-19 நோய் தொற்றுடன் ஏற்பட்ட ஏனைய நோய் நிலைக்காரணமாக அவர் மரணமானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மருதானை பகுதியை சேர்ந்த 70 வயது முதல் 80 வயதுக்கு இடைப்பட்டவர் கடந்த 30 ஆம் திகதி மரணமானார்.
கொவிட்-19 தொற்றுறுதியானமையே அவரது மரணத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் நேற்று மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் வைத்தியசாலையில் தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டமையை அடுத்து அவர் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமானார்.
கொவிட் -19 காரணமாக ஏற்பட்ட நியூமோனியா நிலைமையினால் அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது