
யாழ். நினைவுத்தூபி தகர்ப்பு விவகாரம்-உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், தகர்தெறிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் சிலர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்கவேண்டும், பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு காவல்துறையினர் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவை தொடர்புகொண்டு வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், யாழ்ப்பாண பல்கலைகழக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது என்பதால் அதனை அகற்றும் படி தமக்கு அறிவிக்கப்பட்டதாலேயே அங்கிருந்து அகற்றியதாக குறிப்பிட்டார்.
அதை அகற்றுமாறு தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்கள் தம்மீது பிரயோகிக்கப்பட்டு வந்தன.
அதற்கமைய அந்த நினைவுத் தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டது.
பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்காவிட்டிருந்தால் பின்னர் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு நடைபெறுவது பல்கலைக்கழகத்துக்கு ஏற்புடையது அல்லவென கருதி தாம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி அகற்றப்பட்டமை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபி, பல்கலைக்கழக நிர்வாகத்தினாலேயே அகற்றப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதனை அகற்றியதற்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றியே அந்த நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது.
அதனை அகற்ற பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்த போதே அங்கு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
போராட்டாத்தினை கலைப்பதற்காகவே காவல்துறையினரும், அதிரப்படையினரும் தலையிட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்க்கப்பட்டமை தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தற்போது தகர்க்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாணவர்கள் விரிவுரையாளர்கள் ஊழியர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் அவர்களின் உறவுகளுக்காக அமைக்கப்பட்டதாகவும்.
தமது உணர்வுகளின் வெளிப்பாடாக உறவுகளை நினைவுகூர்வதற்காக அமைத்த இந்த நினைவுத் தூபியை ஒரே இரவில்; தகர்த்தெறிவது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டி நசுக்குவதற்கு ஒப்பானதாகவும் என சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலங்கையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது தொடர்பில் தனது கண்டனங்களை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் .
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி மக்களை நினைவுகூர அமைக்கப்பட்டது.
இதை இரவோடிரவாக அழிக்கப்பட்டுள்ளது.
இது மிக மோசமான நடவடிக்கை.
தமிழ் மக்களின் ஆன்மாவை உலுக்கும் இந்த நடவடிக்கைக்கு எமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
முன்னைய அராங்கங்கள் இதுபோன்ற நடவடிக்கைகள் தான் தமிழ் மக்களை தவிர்க்கவியலாமல் நீண்ட போராட்டத்திற்குள் தள்ளின.
இந்த அரசாங்கம், தமிழ் மக்களை கொந்தளிக்க வைக்கும் நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இப்படியான அடக்குமுறை செயற்பாடுகளை அரசாங்கம் தொடருமானால், இந்த நாட்டில் நிரந்தர அமைதியை என்றுமே காண முடியாமல் போய்விடும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்திற்கு தமிழக எதிர்கட்சி தலைவர் எம்.கே.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் முள்ளிவாய்க்காலில் இறுதிகட்ட போரின் போது உயிரிழந்த பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை அதிர்ச்சியளித்துள்ளதாக இந்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்தவிடயம் தொடர்பில் அவர் தனது டுவிட்டர் கணக்கில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.
குறித்த செயற்பாடுகளுக்கு உதவிபுரிந்த அனைவருக்கும் தனது எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் இந்திய தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்தில் அமையப்பெற்றிருந்த நினைவுத்தூபி தகர்க்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.