யாழில் ஆசிரியர் உட்பட இருவருக்கு கொரோனா

யாழில் ஆசிரியர் உட்பட இருவருக்கு கொரோனா

யாழ். மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் பண்டாரவளையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

இந்த ஆசிரியர் கடந்த 23ஆம் திகதி வீடு திரும்பியிருந்தார். புலோலியில் அண்மையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட இளைஞருடன் தொடர்பிலிருந்தார் என்ற அடிப்படையில் இந்த ஆசிரியரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், கொழும்பு – யாழ்ப்பாணம் அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துவரும் பாரவூர்திச் சாரதிகள் மற்றும் உதவியாளர்களிடம் எழுதுமட்டுவாழில் வைத்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் உதவியாளர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட மந்துவிலைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 241 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இவர்களில் இருவருக்கு மட்டுமே இன்று தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.