
மும்பை அருகே ஊருக்குள் புகுந்த குள்ளநரியால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையை அடுத்த தானே, கார்கர் அலி பகுதியில் நேற்று மதியம் 2.30 மணியளவில் குள்ளநரி ஒன்று புகுந்தது. பின்னர் அங்குள்ள மருந்து கடைக்குள் சென்றது. குள்ளநரியை பார்த்தவுடன் கடை ஊழியர்கள் பீதி அடைந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து மாநகராட்சியினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மாநகராட்சி மீட்பு குழுவினர், வனத்துறையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடையில் இருந்த குள்ளநரியை மீட்டனர்.
அப்போது அதன் காலில் அடிப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் குள்ளநரியை சிகிச்சைக்காக போரிவிலி சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குள்ளநரிக்கு காயம் குணமான பிறகு அது காட்டில் விடப்படும் என வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கிடையே கார்கர் அலி பகுதி சஞ்சய் காந்தி தேசிய பூங்காவையொட்டி இருப்பதால் அங்கு அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வந்து விடுவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.