இந்தோனேசியாவில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: உயிரிழப்பு 47 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. கட்டட இடிபாடுகள், நிலச்சரிவுகள் மற்றும் தொலைத்தொடர்பு பாதிப்புகளுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தோனேசியாவில் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமார் 230 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் முக்கியமான சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கங்களின் தாக்கத்தால் தொலைத்தொடர்பு கோபுரங்களும் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பல பகுதிகளில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கங்களைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட போதிலும், சில கடற்கரையோர கிராமங்களில் சுமார் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை மேலும் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலநடுக்கங்களால் வீடுகளை இழந்த ஏராளமான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.