ஈரான் - அமெரிக்கா போரின் முக்கிய தாக்குதல் காட்சிகள் - ஷிரான் பாசிக் CCIB யிடம் ஒப்படைப்பு
புதிய இணைப்பு
டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபருடன் சேர்ந்து மேலும் இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் விசாரணைக்காக அந்தப் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவருடன் மேலும் இரண்டு சந்தேக நபர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிவப்பு எச்சரிக்கை
கடந்த மே மாதம் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட, தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஷிரான் பாசிக், சர்வதேச காவல்துறையினரால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார்.
கடந்த ஈரான் - அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த போதே அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், இவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக அமெரிக்காவும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவர் டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாகியிருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் 5 பெரும் அளவிலான கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.