
20 திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்; அதிரடி அறிவிப்பால் குவியும் மக்கள்!
20 திருக்குறளை சொன்னால் ஒரு லிட்டர் இலவசம் அதிரடி அறிவிப்பால் குவியும் வாடிக்கையாளர்கள்.
கரூர் மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் நகர் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் நிறுவனமானது, பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வருவோர் 10 குறளை சொன்னால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கப்படும் என பெட்ரோல் பங்க் நிர்வாகம் அறிவித்தது.
இந்தப் போட்டியில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என நிர்வாகம் தெரிவித்தது.
இதனால், பெட்ரோல் போட வருவோர் தங்கள் வீடுகளில் இருக்கும் குழந்தைகளை திருக்குறள் படிக்க வைத்து பணம் இல்லாமல் அரை லிட்டர் முதல் 1 லிட்டர் பெட்ரோலை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து கூறிய தனியார் பெட்ரோல் நிறுவனம், 'எங்களுக்கு நீண்ட நாட்களாகவே இந்த திருக்குறள் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று ஆசை. இன்றைய பெரும்பான்மையான மாணவர்களிடம் தமிழ் வாசிப்பதும், பேசுவதும் குறைந்து வருகிறது.
மேலும் மக்களிடையே திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இலவச பெட்ரோல் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனால், பல மாணவர்கள் பெட்ரோலுக்காக மட்டுமல்லாமல் தங்களின் திறமையை வெளிக்காட்டவும் இந்த போட்டியில் பங்கு கொள்கின்றனர்.' என பெருமிததோடு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.