நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி பாரிய விபத்து
நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்திற்கு ஆளான சம்பவம் உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் டல்லாஸ் நகரங்களில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதி போர்ட் வொர்த். இங்கு கடந்த வியாழன் அன்று கடும் பனிப்பொழிவு நிலவி வந்தது. இதனால் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாதபடி வானிலை மோசமாக காணப்பட்டது. இந்நிலையில் போர்ட் வொர்த் நகரின் நெடுஞ்சாலையில் காலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் கடும் பனி காரணமாக திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
இந்த விபத்து ஏற்பட்டதை அறியாத மற்ற வாகனங்கள் அதேசாலையில் வேகமாக வந்ததால் அதே இடத்தில் விபத்தில் சிக்கிக் கொண்டன. இவ்வாறு விபத்திற்கு ஆளான வாகனங்கள் பத்து வாகனங்களோ அல்லது ஐம்பது வாகனங்களோ அல்ல. மொத்தம் 130 வாகனங்கள் ஒரே இடத்தில் வந்து மோதி பயங்கர விபத்தில் சிக்கிக் கொண்டன.
இதில் சிறிய ரக கார்கள், சொகுசு கார்கள், 18 சக்கரங்கள் கொண்ட பெரிய லொறிகள், ட்ரக்குகள் உள்ளிட்டவை அடங்கும். இந்த விபத்தால் ஏராளமானோர் வாகனங்களுக்குள் சிக்கிக் கொண்டனர். படுகாயத்தால் அவதிப்பட்டனர். இதுபற்றி தகவலறிந்து தீயணைப்பு, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பல்வேறு இடங்களில் இருந்து 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இவர்கள் பல மணி நேரம் போராடி சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்களில் மருத்துவர்கள், அவசரகால பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் அடங்குவர். அடையாள அட்டைகள் மூலம் இவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டது. ஏராளமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து பற்றி விசாரித்த பொலிசார், கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் வழுக்கிக் கொண்டு சென்றதால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.