அடையாள அட்டைகளைப் புதுப்பிப்பது என்ற போர்வையில் நுட்பமான வாட்ஸ் அப் மோசடி
ஆட்பதிப்புத் திணைக்களத்திலிருந்து வந்த உத்தியோகபூர்வ செய்தி வடிவில் வாட்ஸ்அப் வழியாக வரும் ஒரு நுட்பமான நிதி மோசடி குறித்து பொதுமக்கள் உடனடியாக எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு பிரிவு வலியுறுத்துகிறது.
இந்த மோசடி மிகவும் சட்டபூர்வமான மற்றும் உத்தியோகபூர்வமான வடிவில் செய்யப்படுவதால், யார் வேண்டுமானாலும் எளிதில் இதற்குப் பலியாகும் அபாயம் அதிகமாக உள்ளது என்று அந்த பிரிவு சுட்டிக்காட்டுகிறது.
மோசடியான வாட்ஸ்அப் செய்தி
மோசடிக்காரர்கள், ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவுகளின்படி இது வழங்கப்பட்டது என்று குறிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வாட்ஸ்அப் செய்தியையும் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்புகின்றனர்.

அந்தச் செய்தியில், "ஆள்பதிவுச் சட்டத்தின்படி, உங்களின் தேசிய அடையாள அட்டை (NIC) விவரங்களைப் புதுப்பித்துச் சரிபார்ப்பதற்காக ஆட்பதிவுத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிகமாக, செய்தியைப் பெறுபவரின் முழுப் பெயர், அடையாள இலக்கம் மற்றும் முகவரி ஆகியவையும் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன, எனவே இது குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாது.
தகவலைப் புதுப்பிக்க வர வேண்டிய திகதி, நேரம் மற்றும் இடம், அத்துடன் கொண்டுவர வேண்டிய அசல் ஆவணங்கள் மற்றும்கைரேகை சரிபார்ப்பு (வலது பெருவிரல்) விவரங்களும் அதில் உள்ளன.
மோடிக்காரர்களிடம் பலியாகவேண்டாம்
இந்தச் செய்தியின் முடிவில், மோசடிக்காரர்கள் பின்வரும் முக்கியமான எச்சரிக்கையைச் சேர்த்துள்ளனர்.

"இந்தச் சரிபார்ப்பில் கலந்துகொள்ளத் தவறினால், உங்கள் தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம். நீங்கள் சந்திப்பை மறுதிட்டமிட விரும்பினால், உங்கள் சந்திப்பு நேரத்திற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே எங்கள் உதவி எண்ணை அழைக்கவும்."
திட்டமிடப்பட்ட திகதிக்குச் சற்று முன்பு பலர் இந்தச் செய்தியைப் பெறுவதால், தங்கள் அடையாள அட்டை இடைநிறுத்தப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் உடனடியாக அந்தப் போலி தொலைபேசி எண்ணை அழைக்கின்றனர். பின்னர் மோசடிக்காரர்கள், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வது போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து OTP உள்ளிட்ட இரகசிய கடவுச்சொற்களைப் பெற்று, அவர்களின் வங்கிக் கணக்குகளை சூட்சுமமாக பணத்தை திருடிவிடுகின்றனர்.
ஆட்பதிவுத்திணைக்களத்தின் செயற்பாடு
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை CERT, ஆட்கள் பதிவுத் திணைக்களம் ஒருபோதும் வாட்ஸ்அப் வழியாகத் தகவல்களைச் சரிபார்ப்பதில்லை என்று வலியுறுத்துகிறது.

எனவே, இதுபோன்ற செய்திகளில் உள்ள போலியான இணையதள முகவரிகளை (இணைப்புகளை) அணுகுவதையும், தொலைபேசி எண்களுக்கு அழைப்பதையும் தவிர்க்குமாறும், உங்களின் ரகசிய வங்கித் தகவல்களையோ அல்லது OTP குறியீடுகளையோ எந்தவொரு வெளித் தரப்பினருக்கும் வழங்காமல் விவேகமாக இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்