கொரோனா இல்லாத நாட்டில் மீண்டும் பரவியது கொரோனா - அமுல்படுத்தப்பட்டது முழுமையான ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக நியூஸிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஒக்லாந்தில் முழுமையாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு அடுத்த 3 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதிலும் சிறிய தீவு நாடான நியூசிலாந்து வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்தது. அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து கொரோனாவுடன் வந்தவர்களையும் சரியாக கையாண்டு நோய் பரவலை தடுத்தது பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான நியூசிலாந்து அரசு.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நியூசிலாந்தில் உள்நாட்டுக்குள் கொரோனா பரவல் இல்லாத நிலை நீடித்தது. இந்த நிலையில், முதல்முறையாக உள்நாட்டிலேயே 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரான ஒக்லாந்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒக்லாந்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு அடுத்த 3 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
இந்த 3-ம் நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகளின்படி, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும். அத்தியாவசிய பணிகள் மற்றும் பொருட்களை வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும். ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த நியூசிலாந்து மேற்கொண்ட அதே முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளவிருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது