உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது - உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலக மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 


அவர் கூறியதாவது:-

உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

அதிக மக்கள் நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில், சில இடங்களில் 50 முதல் 60 சதவீதம்பேருக்கு கொரோனா வந்துள்ளது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகி உள்ளது.

ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு தடுப்பூசி போடுவதுதான் ஒரே வழி. தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள், கொரோனாவால் ஏற்படும் மரணம், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நிலை ஆகியவற்றில் இருந்து நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன.

அதே சமயத்தில், அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு, லேசான பாதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பூசி உறுதியுடன் செயல்படுவது பற்றி ஆய்வு நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.