சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள கப்பலை அகற்றாவிட்டால் இலங்கை பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம்
சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள பாரிய கொள்கலன் கப்பலை, உடனடியாக அங்கிருந்து அகற்ற முடியாமல்போனால், அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
சுயெஸ் கால்வாயில் கப்பல் தரைதட்டியுள்ளமை காரணமாக, தற்போதே சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளது.
இது, உலக பொருளாதாரத்திற்கும், தாக்கம் ஏற்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நான்கு கால்பந்து மைதானங்களின் பரப்பளவைக் கொண்ட குறித்த பாரிய கொள்கலன் கப்பல், சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ளதன் காரணமாக, சர்வதேச கப்பல் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்படைந்துள்ளதாக, வர்த்தக கப்பல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நாள் ஒன்றிற்கு 9.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சரக்குகள் உரிய துறைமுகங்களை சென்றடைய முடியாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பலை அங்கிருந்து அகற்றி, கப்பல் போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர சில வாரங்கள் செல்லும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்வான் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பல், உலகிலேயே பெரிய கப்பல் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 20,000 கொள்கலன்களை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது