
பிரித்தானிய இளவரசர் மறைவு- தேசிய துக்க தினம் பிரகடனம்!
பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் நேற்றைய தினம் காலமானார். அவரின் மறைவையடுத்து உலகத் தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையான 8 நாட்கள் தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டாம் உலகப் போரின் போது கடற்படை அதிகாரியாகவும் உயர் அட்மிரல் பிரபு பதவியிலும் இருந்த இளவரசர் பிலிப்பின் நினைவாக கடலில் றோயல் கடற்படைக் கப்பல்களில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு அவருக்கு வணக்கம் செலுத்தப்படவுள்ளது.
இதனைவிட, அவுஸ்ரேலியாவில், கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியில், இளவரசர் பிலிப் இறந்ததைக் குறிக்கும் வகையில் 41 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
நியூசிலாந்து இராணுவம் நாளை ஞாயிற்றுக்கிழமை வெலிங்டனில் உள்ள பொயின்ற் ஜெர்னிங்ஹாமில் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து மரியாதை செலுத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர் கோட்டையில் உள்ள ஃப்ரொக்மோர் (frogmore) தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமை காரணமாக இறுதி நிகழ்வு குறித்த முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது எனவும் செய்தி வெளியாகியுள்ளது